Blogger Widgets

logo

Saturday, September 1, 2012

அர்த்தமுள்ள இஸ்லாம் - (தொடர் : 4)

நன்மை என்பது - தொழுகையை நிலைநாட்டுதலும் ஜகாத் வழங்குதலும் என்று இதைத் தொடர்ந்து இறைவன் கூறுகிறான்.

தொழுகையை நிலைநாட்டுதல் பற்றி முன்னர் விளக்கியுள்ளோம். ஜகாத் என்பது ஒரு முஸ்லிம் தனது சொத்துக்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தை கட்டாயமாக வழங்க வேண்டிய கடமையாகும்.

ஏற்கனவே வாரி வழங்குவதைப் பற்றிக் கூறிவிட்டு ஜகாத் என்பதை ஏன் இறைவன் கூற வேண்டும்? அதற்கும் நியாயமான காரணம் உள்ளது.

கால்நடைகளில் இத்தனை சதவிகிதம், தாவரங்களில் இத்தனை சதவிகிதம், அவற்றைத் தவிர ஏனையவற்றில் இரண்டரை சதவிகிதம் என்ற கணக்குப்படி வழங்க வேண்டியது. ஜகாத் இது பற்றி தனியாக இறைவன் கூறுவதால் இதற்கு முன்னர் கூறப்பட்டவை ஜகாத் அல்லாமல் - அதை விட அதிகமாக - மனவிருப்பத்துடன் செய்ய வேண்டிய - இறைவனது அன்பையும் நியாயத் தீர்ப்பு நாளின் பரிசையும் எதிர்பார்த்துச் செய்கின்ற தர்மத்தைத் தான் என்பதை அறியலாம்.

கடமையாக்கப்பட்ட அளவுடன் தர்மத்தை நிறுத்திக் கொண்டால் அது முழுமையான நன்மையாகாது. மாறாக ஜகாத் எனும் கட்டாயக் கடமையான தர்மத்தை வழங்குவதுடன் மேலும் அதிகமாக மேற்சொன்னவர்களின் நலனுக்காகச் செலவிடுவதே முழுமையான நன்மையாகும். இதனால் இரண்டையும் தனித்தனியாக இறைவன் கூறுகிறான்.

தொழுகை, நோன்பு போன்ற இறைவனை நினைவு கூறுகின்ற வணக்கங்களைக் கட்டாயக் கடமையாக்கிய இறைவன், மனிதனை நினைவு கூறக்கூடிய தர்மத்தையும் கடமைகளில் ஒன்றாக ஆக்கி விடுகிறான். இத்தகைய அர்த்தமுள்ள மார்க்கம் இஸ்லாம் தவிர ஏதுமில்லை என்பதற்கு இது சரியான சான்று.

நன்மை என்பது - வாக்களித்தால் அதை நிறைவேற்றுவதாகும் என்று இறைவன் கூறுகின்றான்.

அரசியல்வாதிகள் பதவிக்கு வருவதற்காக எத்தனையோ வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள். அவற்றில் ஒரு சதவிகிதத்தைக் கூட அவர்கள் நிறைவேற்றுவதில்லை. மதங்கள் மக்களுக்குத் தீங்கிழைக்கக் கூடியவை என்று பிரச்சாரம் செய்வோரிடமும் இந்த வாக்குமீறல் சர்வ சாதாரணமாகக் காணப்படுகின்றது. சராசரி மனிதர்களும் கூட அப்போதைக்கு தப்பித்து கொள்வதற்காக வாக்குறுதி அளித்து விட்டு ஏமாற்றி வருகின்றனர்.

பகுத்தறிவுள்ள மனிதன் மட்டுமே வாக்குறுதி வழங்கும் தன்மையைப் பெற்றுள்ளான். மனிதனுக்குத் தனிச் சிறப்பாக வழங்கப்பட்ட இந்தத் தீமையை மனிதன் கேவலப்படுத்துகிறான்.

தனது சொல்லை - தனது எதிர்பார்ப்பை - தனக்குக் கீழே உள்ளவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கும் மனிதன் வாக்குறுதியை மீறும் போது தனது சொல்லைத் தானே அவமதித்தவனாக ஆகின்றான். பிறருக்கு ஆசையூட்டி ஏமாற்றியவனாக ஆகின்றான்.

நன்மையை நாடுபவன் - உண்மை முஸ்லிம் - தான் அளிக்கின்ற வாக்குறுதி எத்துணை கடினமானதாக இருந்தாலும் நிறைவேற்றுவான். அதனால் எத்தனை இழப்புக்கள் ஏற்பட்டாலும் கவலைப்பட மாட்டான். வெறும் சடங்குகளையும் புறச் செயல்களையும் மட்டுமே நிறைவேற்றி விட்டு மனிதனுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லையானால் அவன் முழுமையாக நல்லறம் செய்வதன் என்று இஸ்லாம் ஏற்றுக் கொள்வதில்லை.

(உண்மை முஸ்லிம்களாகிய) அவர்கள் தம்மிடம் அடைக்கலப் பொருட்களையும் தமது வாக்குறுதிகளையும் பேணி நடப்பர்.
(அல்குர்ஆன் 23:8)


வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்! நிச்சயமாக வாக்குறுதிகளும் விசாரிக்கப்பட உள்ளன.
(அல்குர்ஆன் 17:34)

வாக்குகளையும் ஒப்பந்தங்களையும் நிறைவேற்றுவது சிறப்புக்குரிய ஒரு காரியம் என்று மட்டும் இஸ்லாம் கூறவில்லை. மாறாக அது ஒரு கட்டாயக் கடமை. அதை நிறைவேற்றாவிட்ôல் நியாயத் தீர்ப்பு நாளில் இறைவன் அது பற்றியும் விசாரிப்பான் என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு ஒரு வாக்குறுதியளிக்கிறான். அதை நிறைவேற்றுவதிலோ நிறைவேற்றாமலிருப்பதிலோ கடவுளுக்கு சம்பந்தம் இல்லை.

அப்படித் தான் எல்லா மதங்களும் கூறுகின்றன. ஆனால் மனிதனுக்கு மனிதன் அளிக்கக் கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அதையும் விசாரணை செய்து நீதி வழங்குவேன் என்று அல்லாஹ் கூறுகிறான்.

கடவுளை மறந்து விட்டு மனிதனை நினைக்கச் சொல்பவர்கள் நிறைவேற்றாத - நிறைவேற்ற நினைக்காத நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை ஏமாற்றுவதைப் பார்க்கிறோம்.

கடவுளை நினைத்து அவனுக்குப் பயந்து நடக்கும் முஸ்லிம்கள், மனிதனுக்கு அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகின்றனர். இதற்குக் காரணம் இறைவன் அதை ஒரு கடமையாக்கியிருப்பது தான்.

பொய் பேசுவதும் அமானித மோசடி செய்வதும் வாக்கு மீறுவதும் சந்தர்ப்பவாதிகளின் அடையாளம் என்று நபி(ஸல்) கூறியதிலிருந்து (புகாரி) கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் அவசியத்தை உணரலாம்.

முத்தாய்ப்பாக மிக முக்கியமான நன்மையை இறைவன் சொல்லித் தருகின்றான்.

நன்மை என்பது... வறுமையிலிம், துன்பத்திலும், போரின் போதும் பொறுமையுடனிருப்பதுமாகும்.

மனிதனிடம் காணப்படும் பெரும்பாலான தீமைகளுக்கும் ஒருவன் மற்றவன் மீது அநீதி இழைப்பதற்குக் காரணம் பொறுமையின்மை தான். இதை நீக்குமாறு இறுதியாக இறைவன் அறிவுறுத்துகிறான். பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான கட்டங்களை இங்கே குறிப்பிடுகிறான்.

வறுமையின் போது பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். வறுமையை சகித்துக் கொள்ள வேண்டும். வறுமை ஏற்பட்டதற்காக வரம்பு மீறிடக் கூடாது. இது தான் நன்மை! என்று இறைவன் கூறுகிறான்.

தாங்க முடியாத வறுமை ஏற்படும் போது; எதிர்பாராத இழப்புக்கள் ஏற்படும் போது அதைப் பொறுத்துக் கொள்ள இயலாதவன் தற்கொலை செய்து கொள்கிறான். அல்லது வறுமையை நீக்க பிறரது பொருளைத் திருடுகிறான். அபகரிக்கிறான்; மோசடி செய்கிறான். தவறான அத்தனை வழிகளிலும் வறுமையை விரட்ட முயல்கிறான். இழப்பைச் சரிகட்ட எண்ணுகிறான். இவையனைத்துக்கும் காரணம் வறுமையைப் பொறுத்துக் கொள்ள முடியாதது தான். ஒரு முஸ்லிம் அவ்வாறு நடக்கக் கூடாது.

எவ்வளவு தான் வறுமை வாட்டிய போதும் பொறுமையிழக்கக் கூடாது என்று கூறுவதன் மூலம் மனிதன் தனக்குத் தானே செய்து கொள்ளும் அநீதியையும், மனிதன் இன்னொரு மனிதனுக்குச் செய்யும் அநீதியையும் தடுத்து நிறுத்துகிறான். வெளிப்படையான செயல்களை மட்டும் நிறைவேற்றி விட்டு இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஒருவன் பொறுமையைக் கைக்கொள்ளத் தவறினால் அவன் நன்மையைப் பெற்றவனாக முடியாது என்பதை இதிலிருந்து அறியலாம்.

அடுத்து துன்பத்தின் போது பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறான்.

நோய் நொடிகள் மனிதனுக்கு ஏற்படும் போது அதைப் பொறுத்துக் கொள்ளும் பக்குவம் இல்லாதவனும் தற்கொலை செய்கிறான். அல்லது நோய் தீருவதற்காக மௌட்டீகமான செயல்களில் ஈடுபட்டு பகுத்தறிவையும் நிம்மதியையும் இழக்கிறான்.

சாமியார்கள், மந்திவாதிகள், காணிக்கைகள், தாயத்துக்கள் என்று அறிவுக்குப் பொருந்தாத பரிகாரங்களைத் தேடிச் சென்று செல்வத்தையும் அறிவையும் மனிதன் இழப்பதற்குக் காரணம் துன்பத்தைச் சகித்துக் கொள்ளும் பக்குவமின்மை தான்.

இதைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்துவதன் மூலம் மனிதனுக்கு நிம்மதி வழங்கும் வழியை இறைவன் காட்டித் தருகிறான்.

உலகத்தில் அக்கிரமங்கள் தலைவிரித்தாடும் போது அப்பாவிகள் பாதிக்கப்படும் போது, ஏமாற்றுப் பேர்வழிகள் கொட்டமடிக்கும் போது இவற்றை கண்ணுறும் மனிதன் கண்டும் காணாதிருக்க விரும்புகிறான். இந்த அக்கிரமங்களை எதிர்த்தால் தனது சுகம் பாதிக்கப்படும் என்று அஞ்சுகிறான். தேவையில்லாத சிரமங்களை ஏன் சுமக்க வேண்டும் என்று நினைக்கிறான். இதன் காரணமாக உலகத்தில் எவ்வளவு தான் அக்கிரமங்கள் நடந்தாலும் அதை எதிர்த்துப் போராட - குரல் கொடுக்க - பாதிக்கப்பட்டோருக்கு உதவ தயங்குகிறான். இந்தத் தயக்கத்திற்குக் காரணம் இந்தச் சிரமங்களைத் தாங்கும் அளவுக்கு அவனுக்குப் பொறுமை இல்லாதது தான்.

சத்தியத்தை எடுத்துச் சொல்லும் போதும் அசத்தியத்தை எதிர்க்கும் போதும் பொருளிழப்புக்கள் ஏற்படலாம். உயிரிழப்புக்கள் ஏற்படலாம். உடல் உறுப்புக்களை இழக்க நேரிடலாம். அடி உதைகள் பரிசாகக் கிடைக்கலாம். குடும்பத்தவர் பாதிக்கப்படலாம். ஆனாலும் மக்களின் நன்மைக்காக - நீதியை நிலை நிறுத்துவதற்காக ஏற்படக் கூடிய இந்தச் சிரமங்களைக் காரணம் காட்டி நான் இந்தக் கடமையிலிருந்து விலக மாட்டேன் என்று உறுதியை மனிதன் பெற்று விட்டால் அக்கிரமத்தை அடியோடு ஒழிக்கலாம்.

இதன் காரணமாகத் தான் போரின் போதும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டுமென இறைவன் வலியுறுத்துகிறான். இந்த மூன்று கட்டங்களிலும் பொறுமையாக இருப்பதால் மனிதர்களுக்குத் தான் நன்மை இருக்கிறது; பொறுமையை மனிதன் கடைப்பிடிக்காவிட்டால் இறைவனுக்கு எந்தக் கேடும் ஏற்படப் போவதில்லை.

மனிதனுக்கு நன்மை பயக்கக் கூடிய பொறுமையையும் நன்மைகளில் இறைவன் சேர்த்திருப்பது இஸ்லாம் அர்த்தமுள்ள மார்க்கம்; அது சடங்குகளின் தொகுப்பன்று என்பதை ஐயத்திற்கிடமின்றி நிரூபிக்கின்றது.

இந்த காரியங்களில் ஒன்றிரண்டை மட்டும் செய்து விட்டு மற்றவற்றை விட்டு விட முடியாது என்பதற்காக "இவற்றைக் கடைப்பிடிப்போர் தாம் (தமது நம்பிக்கையை) உண்மையாளர்கள் இவர்கள் தாம் இறையச்சமுடையவர்கள் என்று கூறுகிறான்.

இறைவனை ஏற்றிருப்பது உண்மையானால் இறைவனை அஞ்சுவது உண்மையானால் - இத்தனை பணிகளையும் செய்து தனகுக்கும், ஏனை மாந்தருக்கும் தொண்டாற்ற வேண்டும் என்று முடிக்கிறான்.

இஸ்லாத்தின் உயிரோட்டமான அடிப்படையை அறிந்து கொள்ள விரும்புவோருக்கும் - இஸ்லாத்தை ஆராய விரும்புவோருக்கும் - இஸ்லாத்திற்கும் ஏனைய மார்க்கங்களுக்குமுள்ள வித்தியாசங்களைத் தெரிந்து கொள்ள விரும்புவோருக்கும் இந்த ஒரு வசனம் போதுமானதாகும்.
இஸ்லாத்தின் பெயரால் கதைகளை இட்டுக்கட்டி சடங்குகளை உருவாக்கி ஏமாற்றிப் பிழைப்போருக்கும் அவர்களிடம் ஏமாந்தவர்களுக்கும் எச்சரிக்கை செய்வதற்கும் இந்த ஒரு வசனமே போதுமானதாகும். இதை உணர்ந்து நடக்க வல்ல அல்லாஹ் உதவுவானாக.

மனிதன் இவ்வுலகில் வாழும் போது நேர்மை, தானம், தர்மம், வீரம் போன்ற பண்புகளைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டும் என்பதே இஸ்லாத்தின் அடிப்படை. அந்த நற்பண்புகளைக் கடைப்பிடித்து ஒழுகுவதற்கான பயிற்சியே இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட வணக்க வழிபாடுகள் என்பது இவ்வசனத்தின் சாரம்.

நன்றி : www.onlinepj.com

No comments:

Post a Comment