Blogger Widgets

logo

Saturday, September 1, 2012

அர்த்தமுள்ள இஸ்லாம் - (தொடர் 3)


  இறைவனது கட்டளைப்படி நடப்பதன் மூலம் தான் மனிதன் இவ்வுலகிலும் நல்வாழ்வு வாழ முடியும். மறுமையிலும் வெற்றி பெற முடியும் என்றால் இறைவனது கட்டளைகளை எப்படி அறிந்து கொள்வதுகடவுள் மனிதன் மீது மேலாடி அருள்வாக்குக் கூறுவதாக மக்களை ஏமாற்றும் மதகுருக்கள் வழியாகவா? கனவில் வந்து கடவுள் கட்டளையிட்டார் என்று ஏமாற்றிப் பிழைக்கும் எத்தர்கள் வழியாகவா? எந்த வழியில் இறைவன் மனிதர்களுக்கு தன் கட்டளையைத் தெரிவிக்கிறான்?

  மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றாமல் கொண்ட கொள்கையில் கடைசி வரை உறுதியுடன் திகழ்ந்த - தன்னலம் மறந்து மக்களுக்காகவே வாழ்ந்த நல்லொழுக்கம் நன்னடத்தை நற்பண்புகள் ஆகியவற்றை அணிகலன்களாகக் கொண்டிருந்த நல்லவர்களை இறைவன் தன் தூதர்களாகத் தேர்வு செய்து வானவர்கள் வழியாக அவர்களுக்கு வேதங்களை வழங்கினான். அந்த வரிசையில் இறுதித் தூதராக நபிகள் நாயகத்தைத் தேர்வு செய்து குர்ஆன் எனும் அற்புத வேதத்தை வழங்கினான். அதில் தனது கட்டளைகளை இறைவன் தெளிவாக விளக்கினான்.

   வானவர்கள் மூலம் இறைத்தூதர்களுக்கு இறைவன் வழங்கிய வேதங்கள் வழியாக மட்டுமே இறைவனது கட்டளைகளை மனிதன் அறிந்து கொள்ள முடியும். மக்களை ஏமாற்றித் தங்களை வளர்த்துக் கொள்ளும் மதகுருமார்கள் வழியாக அதை அறிய முடியாது எனவும் இஸ்லாம் கூறுகின்றது.

      "நன்மை என்பது அல்லாஹ்வையும், இறுதி நாளையும், வானவர்களையும் வேதத்தையும், நபிமார்களையும் நம்புவதுதான்'' என்று இந்த வசனத்தில் இறைவன் இதைத் தான் குறிப்பிடுகிறான்.

  கடவுளை மற! மனிதனை நினை! என்று நாத்திகம் பேசுவோரின் வாதத்தையும் மனிதனை மறந்து விட்டு கடவுளை நினை என்று கூறும் போலி ஆத்திகர்களின் வாதத்தையும் இஸ்லாம் முற்றாக மறுக்கின்றது. கடவுளையும் நினைக்க வேண்டும். அதே நேரத்மல மனிதனையும் நினைக்க வேண்டும். ஒன்றை மறந்து விட்டுத் தான் இன்னொன்றை அடைய வேண்டுமென்பதில்லை. இரண்டையும் ஒரே நேரத்தில் நினைக்க முடியும். இறைவன் மனிதனுக்கு எதிரி அல்லன். மனிதனை நினைக்கும் வழியை இறைவனைத் தவிர வேறு எவரும் சொல்லித் தர முடியாது என்றும் இஸ்லாம் கூறுகின்றது.

  இதனால் தான் "நன்மை என்பது''செல்வத்தில் விருப்பமிருந்தாலும் உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும்,ஏழைகளுக்கும் வழிப்போக்கர் களுக்கும்,யாசிப்போருக்கும் அடிமைகளை விடுவிப்பதற்காகவும்  செல்வத்தை வாரி வழங்குவது தான்'' என்று இறைவன் கூறுகிறான். வாரி வழங்கச் சொல்வதற்கு இஸ்லாம் வகுத்துள்ள இந்த இலக்கணத்திலும் அர்த்தம் உள்ளது.

   செல்வத்தில், சொத்து சுகத்தில் ஆசை இருக்கும் போதே செலவு செய்வது தான் நன்மையான காரியம். ஆரோக்கியத்துடனும், திடகாத்திரத்துடனும் செல்வத்தை அனுபவிக்கும் நிலையிலும் இருக்கும் போது செய்யப்படும் தர்மமே நன்மை தரக்கூடியது.

   படுக்கையில் வீழ்ந்து, திரட்டிய செல்வத்தை அனுபவிக்க இயலாத நிலைக்குச் சென்று, யாருக்காகச் செல்வத்தைத் திரட்டினானோ அவர்களை அந்தச் செல்வமே தறுதலைகளாக மாற்றியதைக் காணும் நேரத்தில் அவர்களால் அலட்சியப்படுத்தப்பட்டு ஆசையுடன் கட்டிய பங்களாவின் வராந்தாவில் நாற்றமெடுத்த ஆடையுடன் நாட்கணக்கில் போடப்பட்டு மலஜலத்தில் புரண்டு, உறவினர்களால் "கிழம் எப்போது சாகும்'' என்று எதிர்பார்க்கப்படும் நேரத்தில் தர்மம் செய்வதில் நன்மை இல்லை. இதில் எந்தத் தியாகமும் இல்லை.

    இந்த நிலையெல்லாம் ஏற்படும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து அந்த நிலை ஏற்படுவதற்கு முன்பாக செல்வத்தில் பேராசை இருக்கும் நேரத்திலேயே செல்வத்தை வாரி வழங்குங்கள் என்று இஸ்லாம் போதிக்கின்றது.

  செல்வந்தனாவதற்கு ஆசைப்பட்டு, வறுமை ஏற்படுமோ என்று அச்சங்கொண்டு, ஆரோக்கியமானவனாக இருக்கும் போது செய்யும் தர்மமே சிறந்த தர்மம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
நூல்கள்: புகாரி, முஸ்லிம்


நீங்கள் விரும்பக் கூடியவதைச் செலவிடாத வரை நீங்கள் நிச்சயம் நன்மை அடைய முடியாது.
(அல்குர்ஆன் 3:92)


   (நல்லவர்கள்) உணவில் விருப்பம் இருந்தும் அதை ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் கைதிகளுக்கும் வழங்குவார்கள். நாங்கள் அல்லாஹ்வின் திருமுகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து நன்றியையோ பிரதிபலனையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை. (என்றும் கூறுவார்கள்)
(அல்குர்ஆன் 76:8)


தமக்கு வறுமை இருந்தாலும் தம்மை விட மற்றவர்களை அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள்.
(அல்குர்ஆன் 59:9)


    கடவுளை மறந்து விட்டு மனிதனை நினைக்க வேண்டும் என்ற வரட்டுத் தத்துவத்தை விட கடவுளை நினைத்து அவன் கட்டளைக்குப் பணிந்து மனிதனையும் நினைப்பது அதிகப் பயனுள்ளதாகும். மனிதனை நினைக்கச் சொல்லும் நாத்திகர்களை விட கடவுளையும் மனிதனையும் நினைக்கும் முஸ்லிம்கள் பல்லாயிரம் மடங்கு வாரி வழங்குவதை நடைமுறையிலும் நாம் காண்கிறோம். தன்னுடைய செல்வம் இறைவனால் தரப்பட்டது. அவனது கட்டளைப்படி வாரி வழங்குவது தனது கடமை என்று முஸ்லிம்கள் நம்புவதே இதற்குக் காரணம்.

நியாயத் தீர்ப்பு நாளில் இறைவன் செல்வந்தர்களை விசாரிப்பான். அப்போது நான் ஆடையின்றி உன்னிடம் வந்த போது எனக்கு ஏன் நீ ஆடை தரவில்லை என்று கேட்பான். அதற்குச் செல்வந்தன் "இறைவா! நீயோ தேவையற்றவன். உனக்கு எதற்கு ஆடை? "நீ எப்போது என்னிடம் ஆடை கேட்டாய்?'' என்று கேட்பான். அதற்கு இறைவன் ஒரு ஏழை ஒரு நாள் உன்னிடம் ஆடை கேட்டு வரவில்லையா? என்று திருப்பிக் கேட்பான். மேலும் நான் பசியுடன் உன்னிடம் வந்த போது எனக்கு ஏன் உணவளிக்கவில்லை என்பான். அதற்கு மனிதன் இறைவா! நீயோ எந்தத் தேவையுமற்றவன். உனக்கேது பசி என்பான். அதற்கு இறைவன் ஒரு ஏழை உன்னிடம் உணவு கேட்டு வந்தபோது அவனை நீ விரட்டவில்லையா என்பான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
(ஹதீஸின் கருத்து)

   ஏழைகளுக்கு வழங்குவதைத் தனக்கு வழங்குவதாக கருதக் கூடியவன் எல்லாம் வல்ல ஏக இறைவன். இத்தகைய இறைவனை இஸ்லாம் தவிர எந்த மார்க்கமும் கூறவில்லை.

   மனிதர்களின் நலனில் மனிதனை விட அதிகம் அக்கறை செலுத்தக் கூடிய இறைவன் என்பதால் தான் மனிதர்களுக்கு வழங்குவதையும் தனக்குச் செய்யும் கடமைகளில் ஒன்றாக ஆக்கியுள்ளான். இஸ்லாம் அதன் போதனைகள் எவ்வளவு அர்த்தம் நிறைந்தது என்பதற்கு இது தெளிவான சான்றாக அமைந்துள்ளது.

   யாருக்குச் செலவிட வேண்டும் எந்த வரிசைப்படி அது அமைய வேண்டும் என்பதற்கு இஸ்லாம் கூறும் இலக்கணமும் அர்த்தம் நிறைந்தது. ஊருக்குத் தானம் செய்வதற்கு முன் உறவினர்களுக்குத் தானம் செய்ய வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு. உறவினர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.

   ஒவ்வொரு மனிதனும் தனது உறவினர்களின் உண்மையான நிலவரத்தை எளிதில் அறிந்து கொள்ள முடியும். யாரெனத் தெரியாதவர்களின் உண்மை நிலையை அவ்வளவு எளிதில் அறிய முடியாது. பலரிடமும் யாசித்து செல்வத்தை அதிகரிக்க எண்ணுவோர் யாசிப்பவர்களில் இருக்கக்கூடும். ஒவ்வொருவரும் தத்தமது உறவினர்களுக்கு வழங்கினால் யாசிப்போர் இருக்க மாட்டார்கள்.

    அறியாதவர்களுக்குச் செய்யும் தர்மத்தில் மனிதன் இயற்கையிலேயே விளம்பரம் தேடுவான். நாலுபேருக்குத் தெரியும் வகையில் தான் வழங்குவான். உறவினர்களுக்கு வழங்கும் போது விளம்பரம் தேடுவது மிகவும் குறைவாக இருக்கும். இவனோ, இவனது தாயோ தந்தையோ ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் உறவினர்களிடம் ஏதாவது ஒரு வகையில் உதவி பெற்றிருக்கக் கூடும். அதற்கு நன்றிக்கடன் செலுத்தும் கடமையும் இதனால் நிறைவேறுகின்றது.

     உறவினர்களுக்கு வழங்கும் வழக்கமுடையவன் நாலணா எட்டணா என்று வழங்கமாட்டான். அதில் அவனையும் அறியாமல் தாராளத் தன்மை ஏற்படும். தேவைக்கேற்ப உதவும் நிலை அவனையுமறியாமல் ஏற்படும். யாரெனத் தெரியாதவர்களிடம் இவ்வாறு தாராளம் காட்டுவதில்லை.

    யாரெனத் தெரியாதவர்களிடம் உதவி கேட்டு வருபவன் இன்னும் பலரிடம் செல்லக் கூடும்! என்று தர்மம் செய்பவன் நினைப்பதால் தர்மத்தைச் சுருக்கி விடுகிறான். உறவினர்களுக்கு நாம் தானே கொடுத்தாக வேண்டும் என்று நினைப்பதால் அந்த நினைப்பு தாராளமாக வழங்க அவனைத் தூண்டுகிறது.

    கடவுளையும் மனிதனையும் நினைக்கும் முஸ்லிம்கள் பல்லாயிரம் மடங்கு வாரி வழங்குவதை நடைமுறையிலும் நாம் காண்கிறோம். தன்னுடைய செல்வம் இறைவனால் தரப்பட்டது. அவனது கட்டளைப்படி வாரி வழங்குவது தனது கடமை என்று முஸ்லிம்கள் நம்புவதே இதற்குக் காரணம்.

ஏழைகளுக்குச் செய்யும் தர்மம், தர்மம் மட்டும் தான். உறவினர்களுக்கு வழங்கும் தர்மம், தர்மமும் உறவினர்களை அனுசரித்தலும் ஆகும் என்பது நபிமொழி.

   தந்தையை இழந்து நாதியற்று நிற்கும் அனாதைகளுக்காகச் செலவிடுவதை இரண்டாவதாக இவ்வசனம் கூறுகிறது. அனாதைகளுக்கு வழங்குதல் என்றால் அவர்களுக்கு ஐந்தோ பத்தோ வழங்குவது மட்டும் தான் என்று புரிந்து கொள்ளக் கூடாது. மாறாக அனாதைகளைத் தம் சக்திக்கேற்பப் பொறுப்பேற்றுக் கொள்வது தான் சிறந்தது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) ஆட்காட்டி விரலையும் நடு விரலையும் இணைத்துக் காட்டி "நானும் அனாதையைப் பொறுப்பேற்றவனும் இப்படி (மறுமையில்) இணைந்திருப்போம்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல்(ரலி)
நூல்கள்: புகாரி, அபூதாவூத்.

   நான்கு பிள்ளைகள் உள்ள ஒருவர் தனக்குச் சக்தியிருந்தால் ஐந்தாவதாக ஒரு அனாதையையும் தன் பிள்ளை போல் வளர்த்து வந்தால் நபிகள் நாயகத்துடன் நெருக்கமாக இருக்கும் பாக்கியம் கிடைக்கிறது என இஸ்லாம் கூறுகின்றது. தந்தை உயிரோடு இருந்தால் நாம் இப்படி ஆகியிருப்போமா என்று எண்ணி எண்ணி ஏங்கும் அனாதைகளின் துயர் துடைப்பது தான் நன்மையே தவிர திசைகளை நோக்குவது அல்ல என்பதை இவ்வசனம் அழுத்தமாகக் கூறுகின்றது. மூன்றாவதாக ஏழைகளுக்கு வழங்குவதை இவ்வசனம் குறிப்பிடுகின்றது. இந்த இடத்தில் மூலத்தில் மிஸ்கீன் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு கவள உணவு, இரண்டு கவள உணவுகள் யாரை விரட்டுகின்றதோ அவன் மிஸ்கீன் அல்லன். தனது வாழ்க்கைக்குப் போதுமான செல்வம் இல்லாதவனே மிஸ்கீன் ஆவான் என்பது நபிகள் நாயகத்தின் விளக்கம்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

    ஒரு வேளைச் சோற்றுக்காக வீடு வீடாக யாசிக்கக் கிளம்புபவனை இங்கே கூறுôமல் யாரிடமும் யாசிக்காமல் போதிய வருமானமின்றி இருப்பவனை இவ்வசனம் கூறுகின்றது.

   நூறு ரூபாய் தேவையுடையவனுக்கு தொண்ணூறு ரூபாய் தான் வருமானம் கிடைக்கிறது என்றால் அவன் மிஸ்கீன்; ஏழை. அத்தகையோர் கிடைக்கும் கஞ்சியைக் குறைத்துக் கொள்வார்களே தவிர யாரிடமும் யாசிக்க மாட்டார்கள். இத்தகையோருக்குத் தர்மம் செய்து பற்றாக்குறையை நிவர்த்திக்கச் சொல்கிறது இஸ்லாம்.

   மிஸ்கீன் என்பவன் யாரிடமும் யாசிக்க மாட்டான் என்றால் எப்படி அவனுக்குத் தர்மம் செய்ய முடியும்? தர்மம் செய்பவன் தானாக விசாரித்து தேடிச் சென்று தான் வழங்க முடியும். நம்மிடம் கேட்டு நம் கதவைத் தட்டுவார்கள் என்று காத்திராமல் மக்களுடன் பழகி அவர்களின் நிலையை அறிந்து உதவுவது இங்கே மறைமுகமாக உணர்த்தப்படுகின்றது.

   இஸ்லாம் என்பது சடங்குகளின் தொகுப்பன்று. வறியவர்களை தேடிச் சென்று வாரி வழங்குவதே இஸ்லாம் என்பதை இவ்வசனம் கூறுகின்றது.

இவ்வசனத்தில் நான்காவதாக வழிப்போக்கர்கள் கூறப்படுகின்றனர். உள்ளூரில் வசதிமிக்கவர்களாக இருந்தாலும் வெளியூர் பயணம் சென்றிருக்கும் போது திக்கற்ற நிலையை அடைந்தோர் வழிப்போக்கர் எனப்படுகின்றனர்.

நாணயங்கள் பயன்படுத்தப்படும் இன்றைய நிலையில் வழிப்போக்கர்களின் நிலையை உணர முடியாது. பண்டமாற்று முறை மட்டும் அமுலில் இருந்த காலத்தில் எவ்வளவு வசதி படைத்தவரானாலும் வெளியூரில் சிரமப்பட்டே ஆக வேண்டும். பல நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களும் இராது. இத்தகைய காலத்தில் எவ்வளவு பெரிய செல்வந்தனும் வெளியூரில் ஏழையின் நிலையில் தான் இருப்பான்.

இதனால் தான் வெளியூரிலிருந்து வரும் அறிமுகமற்றவர்களையும் இஸ்லாம் விருந்தாளிகள் என்கிறது. இவ்வாறு வரக்கூடியவர்களுக்கு மூன்று நாட்கள் வரை உணவிட்டு உபசரிப்பதை இஸ்லாம் வலியுறுத்தியது. அன்றைய நிலையில் இவ்வாறு உபசரிக்காவிட்டால் வழிப்போக்கன் செத்து மடிய வேண்டும்.

ஒரு ஊராரிடம் மூஸா (அலை), கிள்று (அலை) ஆகியோர் சென்ற போது அவ்வூரார் விருந்தளிக்க மறுத்தனர். இதை மூஸா (அலை) அவர்கள் பெரிய குற்றமாகக் கருதியதும் இந்த காரணத்தால் தான்.

இன்று ஏழைகள் மட்டுமே வழிப்போக்கர்களாக இருக்க முடியும் அல்லது பணத்தைப் பறிகொடுத்தவர்கள் மட்டுமே திக்கற்றவர்களாக இருக்க முடியும்.
ஐந்தாவதாக யாசிப்போரை பற்றி இறைவன் கூறுகிறான்:

யாசித்து வருபவன் தான் பொருளாதாரத்தில் மிகவும் அடிமட்டத்தில் இருப்பவன் என்று மக்கள் நினைக்கின்றனர். ஓரளவு அது உண்மையாகக் கூட இருக்கலாம். அவ்வாறிருந்தும் யாசிப்போரை ஐந்தாவது நிலையில் இஸ்லாம் கூறுவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.

இஸ்லாம் வரிசைப்படுத்தக் கூடிய முந்தைய நான்கு பிரிவினர்கள் முறையாக கவனிக்கப்பட்டால் யாசிபோர் என்று யாருமே இருக்க மாட்டார்கள். ஒவ்வொருவரும் தத்தமது உறவினர்களில் உள்ள ஏழைகளைக் கவனித்துக் கொண்டால் பற்றாக்குறை உள்ளவர்களைத் தேடிச் சென்று அதை நிவர்த்தி செய்தால், அனாதைகளின் வாழ்க்கைக்குப் பொறுப்பேற்றுக் கொண்டால்; வழிப்போக்கர்களின் நிலையறிந்து உதவி வந்தால் யாசிப்பதற்கு எவருமே இருக்க மாட்டார்கள்.

இந்த நான்கு நிலைகள் தான் ஒருவனை யாசிக்கும் நிலைக்குத் தள்ளி விடுகின்றன. யாசிக்கின்றவர்கள் எவராக இருந்தாலும் வசதிமிக்க உறவினர்களால் அவர்கள் கவனிக்கப்படாமல் இருப்பார்கள். அல்லது தமது வாழ்க்கையை நடத்துவதற்குப் போதிய வருமானமில்லாது, மற்றவர்களால் கவனிக்கப்படாமல் விடப்பட்டிருப்பார்கள். அல்லது ஆதரிப்போர் இல்லாத அனாதைகளாக இருப்பார்கள் அல்லது வழிப்போக்கராக வந்த இடத்தில் ஏற்பட்ட கஷ்டம் யாசிக்கத் தூண்டி இருக்கும். இந்நான்கு காரணங்களையும் களையுமாறு இஸ்லாம் கூறுகின்றது.

இந்நான்கு காரணங்களும் களையப்பட்ட பின்னரும் ஒருவன் யாசிக்க வருகிறான் என்றால் அவன் பொருளாதாரத்தை உழைக்காமல் அதிகம் திரட்டவே யாசிக்கிறான். இத்தகையோர் கடைசி நிலையில் வைக்கப்பட வேண்டியவர்கள் தாம் என்பதை அறிவுடையோர் மறுக்க மாட்டார்கள்.
யாசித்து வருவோரை விரட்டாதீர்கள். (93:10) என்று அல்லாஹ் கூறினாலும் யாசிப்பதை முழுமையாகத் தவிர்க்க வேண்டும் என்பது தான் இஸ்லாம் காட்டும் வழி.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கிய சமுதாயம் யாசிப்பதற்குரிய எல்லா தகுதிகளும் இருந்தும் எந்நிலையிலும் யாரிடமும் யாசித்ததில்லை.

பூமியில் நடமாடி(த் தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்குத் தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும். (பிறரிடம் யாசிக்காத) அவர்களின் சுயமரியாதையைக் கண்டு அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான். அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம். அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்க மாட்டார்கள். இத்தகையோருக்காக நல்லதினின்று நீங்கள் எதைச் செலவு செய்தாலும் அதை நிச்சயமாக அல்லாஹ் அறிகிறான்.
(அல்குர்ஆன் 2:273)

யாசித்து வருவோருக்குக் கொடுக்க வேண்டும் என்று செல்வந்தவர்களுக்குக் கட்டளையிடும் இஸ்லாம் யாசித்து வருவதையும் தடுக்கின்றது.

தவிர்க்கவே முடியாத தேவைக்காக யாசிப்பதையும் ஆட்சியாளரிடம் யாசிப்பதையும் தவிர மற்ற யாசகங்கள் மனிதன் தனது முகத்தில் போட்டுக் கொள்ளும் (அவமானச்) சின்னமாகும் என்பது நபிமொழி.

இது போன்ற காரணங்களுக்காக யாசிப்போர் ஐந்தாவதாக இங்கே குறிப்பிடுகிறார்கள்.

ஆறாவது அடிமைகளை விடுவிப்பதற்கும் பொருளாதாரத்தைச் செலவிட வேண்டும் என்று இஸ்லாம் கூறுகின்றது. இன்றைக்கு அடிமைகள் உலகில் எங்குமே இல்லை என்பதால் இதற்கு விளக்கம் தேவையில்லை என்றாலும் அடிமைகள் முற்றாக இல்லாமல் போனதற்கு இவ்வசனமும் இன்னபிற வசனங்களும் அடிமைகளை விலைக்கு வாங்கி விடுவிக்குமாறு ஆர்வமூட்டியதே காரணமாகும். இதை நினைவில் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வையும் நியாயத் தீர்ப்பு நாளையும் நம்புதல், பொருளாதாரத்தை மேற்கண்ட வழிகளில் செலவிடுதல் ஆகியவற்றுடன் நன்மை முற்றுப் பெறவில்லை. இன்னமும் இருக்கின்றது என்று இவ்வசனம் தொடர்ந்து கூறுகின்றது.

அல்லாஹ்வையும் நியாயத் தீர்ப்பு நாளையும் நம்பி, வாரி வழங்கி தொழுகையை நிலைநாட்டுவதுடன் நன்மைகள் முடிந்து விடுவதில்லை. மனிதனுக்குப் பயனளிக்க தக்க நற்பண்புகளையும் நன்மைகளின் பட்டியலில் இறைவன் இடம் பெறச் செய்துள்ளான்.

நன்றி : www.onlinepj.com

1 comment: