Wednesday, August 8, 2012
அர்த்தமுள்ள இஸ்லாம் - (தொடர் 1)
சடங்குகள், மூட நம்பிக்கைகள் மற்றும் அர்த்தமில்லாத கேளிக்கைகளின் தொகுப்பே மதங்கள் என்ற எண்ணம் பகுத்தறிவாளர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் அறிவு ஜீவிகள் ஆகியோரிடம் ஆழமாகப் பதிந்துள்ளது. இஸ்லாத்தைப் பற்றி இவர்களின் எண்ணம் இதுவாக இருந்தால் அந்த எண்ணம் முற்றிலும் தவறாகும். இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொண்டால் தமது முடிவு தவறு என்பதை உணர்வார்கள்.
இஸ்லாம் என்பது மனித நேயம் மிக்க மார்க்கம்; மனித உரிமைகளை மதிக்கச் சொல்லும் மார்க்கம்; நற்பண்புகளை மனிதர்களிடம் வளர்ப்பதற்காக வழங்கப்பட்ட மார்க்கம். சடங்குகள் போன்று தோற்றமளிக்கும் மிகச் சில காரியங்கள் இஸ்லாத்தில் இருந்தாலும் அதன் நோக்கம் மனிதனைப் பக்குவப்படுத்துவது தான்.
தினமும் ஐவேளைத் தொழ வேண்டும் என்று இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இத்தொழுகையில் நின்றும், குனிந்தும், சிரம் பணிந்தும், அமர்ந்தும் முஸ்லிம்கள் இறைவனைத் துதிக்கின்றனர்.
இறைவன் மிகப் பெரியவன்; நான் அவனது கட்டளைக்குக் கட்டுப்பட வேண்டிய சிறியவன் என்ற பயிற்சியை மனிதன் இதன் மூலம் பெறுகிறான். இதனால் மனித சமுதாயத்திற்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன? ஏராளமாக உள்ளன.
மனிதன் மானத்துடனும், ரோஷத்துடனும், சுயமரியாதையை இழக்காமலும் வாழ வேண்டும் என்று அறிவுடையோர் எதிர்பார்க்கின்றனர். இந்த சுயமரியாதைக்காவே பல இயக்கங்கள் தோன்றியுள்ளன.
தன்னை விட எல்லா வகையிலும் குறைந்த நிலையிலுள்ள ஆகாயம், சூரியன், சந்திரன், நெருப்பு, கற்கள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றுக்கு முன் மனிதன் மண்டியிட்டு வணங்கும் போது சுயமரியாதையை இழந்து விடுகிறான்.
தன்னை விடத் தாழ்ந்தவற்றுக்கு முன் மண்டியிடும் போதும் இவன் தாழ்ந்து விடுகிறான். தனக்குச் சமமான, தன்னைப் போலவே ஆசாபாசங்கள் உள்ள, தன்னைப் போலவே பலவீனங்கள் நிறைந்த, மலஜலத்தைச் சுமந்திருக்கக் கூடிய இன்னொரு மனிதன் முன்னால் மண்டியிடும் போதும் மனிதன் தனது சுயமரியாதையை இழந்து விடுகின்றான்.
இவற்றை எதிர்த்துப் பிரச்சாரம் செய்த சுயமரியாதைக் காரர்களும் கூட இன்னொரு வடிவில் சுயமரியாதையை இழந்து நிற்கும் பரிதாப நிலையைப் பார்க்கின்றோம்.
கல்லுக்குப் பூஜை செய்யலாமா? அவற்றால் அதை உணர முடியுமா? என்றெல்லாம் கேள்வி கேட்டவர்கள் இன்னொரு கல்லுக்கு - பெரியார் சிலைக்கு- மாலை அணிவித்து மரியாதை செய்கின்றனர். என்றோ செத்து விட்ட பெரியார் இதை உணர முடியுமா? என்பதைச் சிந்திக்க மறந்து விட்டனர். சிலைகள் தான் மாறியுள்ளனவே தவிர சிலை வணக்கம் மாறவில்லை.
அனைவரும் சுயமரியாதையை வந்த விலைக்கு விற்றுக் கொண்டு தான் உள்ளனர். விற்கும் சந்தை தான் மாறியுள்ளதே தவிர விற்பனை நின்றதாகத் தெரியவில்லை.
அல்லாஹ் மட்டுமே பெரியவன் என்று ஐங்காலத் தொழுகைகள் மூலம் பயிற்சி பெற்றவன், தன்னை விட உயர்ந்தவனாகிய இறைவன் முன்னிலையில் மட்டும் தான் சிரம் தாழ்த்துவான். வேறு எந்தச் சக்தியின் முன்னேயும் தலை தாழ்த்த மாட்டான்.
இதனால் தான் பதினான்கு நூற்றாண்டுகளாக உண்மை முஸ்லிம்கள் எந்த சக்திக்கும் அடிபணியாமல், எவர் முன்னேயும் சிரம் தாழ்த்தாமல் இன்று வரை சுயமரியாதையோடு கம்பீரமாக நடைபோட்டு வருகின்றனர்.
தினமும் ஐந்து வேளை அல்லாஹ்வுக்கு முன்னால் மட்டும் ஒருவன் தன்னைத் தாழ்த்திக் கொள்ளும் போது வேறு எவர் முன்னிலையிலும், எதன் முன்னிலையிலும் தன்னைத் தாழ்த்தக் கூடாது என்ற உறுதியைப் பெறுகிறான்.
மேலும் தொழுகையில் இறைவனது வல்லமையை நினைவு கூர்ந்து அவனைப் போற்றிப் புகழ்வதால் இறைவனைப் பற்றிய அச்சம் அதிகரிக்கின்றது. இவ்வுலகில் நல்லவனாக வாழச் செய்கின்றது. குனிந்து, நிமிர்ந்து, சிரம் பணிந்து, தொழுது விட்டு எல்லா அக்கிரமங்களிலும் ஒருவன் ஈடுபட்டு வந்தால் அத்தொழுகைக்கு இறைவனிடம் எந்த மதிப்பும் கிடையாது
.
தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும்.
(அல்குர்ஆன் 29:45)
தீமைகளை விட்டும், மானக்கேடானவற்றை விட்டும் தடுப்பதற்கான பயிற்சியே தொழுகை என்பதை இவ்வசனத்திலிருந்து அறியலாம். இந்தப் பயிற்சியை ஒருவன் பெறவில்லையானால் அவனது தொழுகை, இறைவன் பார்வையில் தொழுகையே இல்லை என்பதையும் இவ்வசனம் மிகத் தெளிவாகக் கூறுகின்றது.
நோன்பு என்றொரு கடமை இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. உண்ணுதல், பருகுதல், உடலுறவு கொள்ளுதல் ஆகியவற்றைப் பகல் காலங்களில் விட்டு விடுவது நோன்பு எனப்படுகிறது. மேலோட்டமாகப் பார்க்கும் போது மனிதன் தன்னைத் தானே வருத்திக் கொள்வது போல் இது தோற்றமளித்தாலும் நோன்பின் நோக்கம் அதுவன்று.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.
(அல்குர்ஆன் 2:183)
மனிதனை வதைப்பது நோன்பின் நோக்கமன்று. மாறாக படைத்த இறைவனுக்காக இவ்வாறு சிறிய தியாகம் செய்து பயிற்சி பெற்ற ஒருவன், அதே இறைவன் வலியுறுத்தும் ஏனைய நற்பண்புகளைத் தன் வாழ்வில் கடைப்பிடிப்பான் என்பதே நோன்பின் நோக்கம்.
தனக்கு உரிமையான உணவை இறைவன் தவிர்க்கச் சொல்கிறான் என்பதற்காகப் பகல் காலங்களில் தியாகம் செய்பவன், தனக்கு உரிமையில்லாத பொருட்களைப் பிறரிடமிருந்து திருடி, கொள்ளையடித்து, லஞ்சம் வாங்கி, மோசடி செய்து, பறித்துக் கொள்ளத் துணிய மாட்டான். இந்தப் பயிற்சியைப் பெறாமல் ஒருவன் காலமெல்லாம் பட்டினி கிடந்தாலும் இறைவனிடம் அதற்கு எந்த மதிப்பும் இல்லை என்பது இஸ்லாத்தின் தீர்மானமான முடிவு.
யார் பொய் பேசுவதையும், தீய செயல்களையும் விட்டு விடவில்லையோ அவன் தண்ணீரையும் உணவையும் விட்டு விடுவதில் இறைவனுக்கு எந்தத் தேவையுமில்லை என்பது நபிமொழி.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரி (1903), (6057)
மாபெரும் இலட்சியத்தை அடைவதற்கான பயிற்சியே நோன்பு என்பதை இந்த நபிமொழியிலிருந்து அறியலாம்.
வசதி படைத்தவர்கள் ஹஜ்ஜுப் பெருநாளின் போது ஆடு, மாடு, ஒட்டகங்களைப் பலியிட வேண்டுமென இஸ்லாம் கூறுகின்றது. இவ்வாறு பலியிடப்படும் பிராணிகளின் மாமிசமோ, இஜ்த்தமோ, ஏனைய பொருட்களோ இறைவனுக்குத் தேவை என்பதற்காக இஸ்லாம் பலியிடச் சொல்லவில்லை.
அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக!
(அல்குர்ஆன் 22:37)
இந்தப் பலியிடுதலிலும் கூட இறையச்சம் என்ற பயிற்சி தான் நோக்கம் என்பதை இவ்வசனம் தெளிவுபடுத்துகின்றது.
இறைவனுக்காக எனது உயிர், உடல் அனைத்தையும் தியாகம் செய்வேன். அதன் அடையாளமாகவே இதைப் பலியிடுகிறேன். இறைவனுக்காக, சத்தியத்தை நிலைநாட்டுவதற்காக என் உயிரைத் தியாகம் செய்யும் நிலை ஏற்பட்டால் அதற்கு நான் தயார் என்ற பயிற்சியைப் பெறாமல் அறுத்துப் பலியிடுவதில் இறைவனுக்கு எந்தத் தேவையுமில்லை.
இஸ்லாத்தினுடைய எல்லா வணக்க வழிபாடுகளிலும் இந்தப் பயிற்சி தான் பிரதான நோக்கம். இந்தப் பயிற்சி கூட மனிதன் மனிதனாக வாழ்வதற்காகத் தான்.
நன்றி : www.onlinepj.com
Subscribe to:
Post Comments (Atom)
.jpg)
No comments:
Post a Comment